திருச்சியில் கல்லூரி மாணவியை கடத்தி கற்பழிக்க முயற்சி- வாலிபர் கைது
திருவெறும்பூர்:
திருச்சி அருகே துவாக்குடியில் என்.ஐ.டி. பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு வெளிமாநில மாணவ- மாணவிகள் பலர் படித்து வருகிறார்கள். இவர்கள் அங்குள்ள விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். இதில் தங்கி மும்பையை சேர்ந்த தாகீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி என்ஜினீரியங் படித்து வருகிறார்.
மாணவி தாகீரா தன்னுடன் படிக்கும் மாணவரை காதலித்து வந்துள்ளார். அவ்வப்போது காதலனுடன் வெளியில் சுற்றி விட்டு வருவார். கடந்த வெள்ளிக்கிழமை தனது காதலனுடன் வெளியே சென்ற தாகீரா நேற்று அதிகாலை கல்லூரி விடுதிக்கு திரும்பினார்.
அதிகாலை நேரமாக இருந்ததால் விடுதி வாசல் பூட்டப்பட்டிருந்தது. இதனால் தாகீராவும், காதலனும் கல்லூரி எதிரே உள்ள பஸ் நிறுத்த நிழற்குடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். இருட்டில் தனியாக நின்ற தாகீரா மற்றும் காதலனிடம் அவர்கள் தங்களை போலீஸ் என்று கூறிக்கொண்டனர். மேலும் இங்கு ஏன் இந்த நேரத்தில் நிற்கிறீர்கள்? என கேட்டனர். பிறகு தாகீராவை மட்டும் விடுதியில் கொண்டு விடுவதாக கூறி பைக்கில் ஏறும்படி கூறியுள்ளனர்.
இதற்கு தாகீராவின் காதலன் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே 3 பேரும் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தாகீராவை வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றி சென்றனர்.
துவாக்குடி ரோட்டில் கல்லூரி அருகில் காட்டு பகுதி உள்ளது. ஆட்கள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதிக்கு அழைத்து சென்ற 3 பேரும் தாகீராவிடம் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது தாகீரா அலறினார். உடனே பயந்து போன 3 பேரும் யாராவது வந்து விடுவார்கள் என்ற பீதியில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டனர்.
அதன்பிறகு அந்த மாணவி காட்டு பகுதியில் இருந்து பீதி கலந்த முகத்துடன் ரோட்டு பகுதிக்கு வந்தார். நடந்த சம்பவத்தை தோழிகளிடம் கூறினார்.
தாகீராவின் பெற்றோர் மும்பையை சேர்ந்தவர்கள் ஆவர். இவரது தந்தை சென்னை கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். தற்போது கல்பாக்கத்தில் வசித்து வருகிறார்கள். நடந்த சம்பவம் குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர்.
சம்பவம் குறித்து அவர்கள் துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டாங்ரே மற்றும் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் ஞானவேல் விசாரணை நடத்தினர்.
அப்போது அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் 3 வாலிபர்களின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒருவன் துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 22) என்பது தெரியவந்தது.
மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவரது 2 நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மாணவி தாகீரா மற்றும் காயம் அடைந்த அவரது காதலன் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கைதான மணிகண்டன் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. நேற்று வழிப்பறி செய்து பணம் பறிக்க சென்றபோது காதல் ஜோடி சிக்கி கொண்டதால் சபலப்பட்டு கடத்தி சென்று கற்பழிக்க அவர் முயன்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் திருச்சி அருகே இருங்களூர் காட்டுப்பகுதியில் தனியே நின்று பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியை 3 பேர் தாக்கி காதலனை குத்தி கொலை செய்ததோடு, அந்த பெண்ணையும் பலாத்காரம் செய்தது. திருச்சியை உலுக்கிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,
கொலை செய்யப்பட்ட அந்த காதலனும், கல்லூரி மாணவர் தான். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் தனியே நின்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு அவரது காதலி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவங்கள் பற்றி அறிந்தும் தனியே காதல் ஜோடி, மாணவ-மாணவிகள் சென்று ஆபத்தில் சிக்கிக் கொள்வது அவர்கள் திருந்த வில்லை என்பதையே காட்டுவதாக பெற்றோர்கள் வேதனையுடன் கூறினர்.