சேலம் அருகே கியாஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
காடையாம்பட்டி:
இமாச்சலப்பிரதேசம், தர்மசலம் மாவட்டம் காங்கர் நகரில் உள்ள காஹல் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(வயது 39). கியாஸ் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் கொச்சியில் இருந்து மராட்டியத்துக்கு கியாஸ் டேங்கர் லாரியை ஓட்டி சென்றார். நேற்று இரவு இந்த லாரி 12.30 மணியளவில் சேலத்தை அடுத்த தளவாய்பட்டி காமராஜர்நகர் அருகே வந்துகொண்டிருந்தது.
அப்போது சந்தோஷ்குமார் தூக்க கலக்கத்தில் தூங்கியதாக தெரிகிறது. இதனால் நிலைதடுமாறிய லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் லாரியின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து லாரி டிரைவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.