சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் வசதி
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பயணிகள், பொது மக்கள் வசதிக்காக சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
500 லிட்டர் கொள்ளளவு கொண்ட நவீன சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் நிலையம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த இலவச குடிநீர் வசதியால் மெட்ரோ ரெயில் நிலையம், பூங்கா ரெயில் நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், சென்ட்ரல் பஸ் நிலையம் ஆகியவற்றுக்கு வரும் பயணிகள், பொது மக்கள் பயன் பெறுவார்கள்.
இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மெட்ரோ ரெயில் பயணிகள் பொது மக்கள் வசதிக்காக சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் முதல் தடவையாக இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி தொடங்கி உள்ளோம்.
இதேபோல மேலும் ஒருசில மெட்ரோ ரெயில் நிலையங்களில் விரைவில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain