செய்திகள்
தினகரன் முன்னிலையில் நடிகர் ரஞ்சித் அ.மு.ம.க.வில் இணைந்தார்.

தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்- நடிகர் ரஞ்சித்

Published On 2019-02-28 05:27 GMT   |   Update On 2019-02-28 05:27 GMT
பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய இருப்பதாக நடிகர் ரஞ்சித் தெரிவித்தார். #ActorRanjith #TTVDinakaran
சென்னை:

சிந்துநதிபூ, மறுமலர்ச்சி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரஞ்சித். இவர் முதலில் அ.தி.மு.க.வில் இருந்து வந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி பா.ம.க.வில் இணைந்தார். இதற்கான காரணத்தை அவரிடம் கேட்டபோது, ‘நாட்டை மீட்டெடுத்து சீர்ப்படுத்தக்கூடிய தகுதி பாட்டாளி மக்கள் கட்சிக்குத்தான் உண்டு. அன்புமணி ராமதாஸ், தமிழகத்தை ஆளும் தலைமை பதவியை ஏற்றால்தான் முடியும். அவருக்கு உறுதுணையாகவே கட்சியில் சேர்ந்தேன்’ என்றார்.

ரஞ்சித்துக்கு பா.ம.க.வில் மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து கட்சி கூட்டங்களிலும் பங்கேற்றார்.

இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க, கூட்டணியில் பா.ம.க இணைந்தது. இதனால் ரஞ்சித் பா.ம.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நேற்று டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அ.ம.மு.க.வில் இணைந்தார்.

தொடர்ந்து நிருபர்களை சந்தித்த ரஞ்சித், “மாற்றம் முன்னேற்றம் என்று சொல்லிக்கொண்டு தமிழக மக்களை சிலர் ஏமாற்றி வருகின்றனர். தற்போது அவர்கள் தன்மானத்தை விட்டு கூட்டணிக்காக விலை போய்விட்டனர். அதனால்தான் அந்தக்கட்சியிலிருந்து வெளியேறி அ.ம.மு.க.வில் இணைந்திருக்கிறேன்.

என்னை தொடர்ந்து நிறைய பேர் அந்த கட்சியில் இருந்து வெளியேறுவார்கள். தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே அ.ம.மு.கவில் இணைந்து எனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறேன். டி.டி.வி.தினகரன் ஒரு நல்ல மக்கள் தலைவராக வலம் வருகிறார். வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய இருக்கிறேன்” என்றார்.  #ActorRanjith #TTVDinakaran
Tags:    

Similar News