விவசாயிகளை அழிக்க நினைக்கும் மோடி அரசின் பட்ஜெட்- பிஆர் பாண்டியன் பேட்டி
மன்னார்குடி:
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மத்திய அரசின் பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட் விவசாயிகள் மீது மோடிக்கு உள்ள கோபத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியிடாதது மரணப்படுக்கையில் உள்ள விவசாயிகளை மீட்க உதவாத ஏமாற்று பட்ஜெட்.
ஒரு எக்டேருக்குள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை என்பது யானை பசிக்கு சோளப்பொறி போன்றது. கடனை தள்ளுபடி செய்ய மறுப்பது விவசாயிகளை அழிக்க நினைக்கும் செயல். உரிய காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிக்கு 4 சதவீத வட்டி என்கிற நடைமுறை உள்ளபோது இன்று 3 சதவீதம் மானியம் என அறிவிப்பது ஏமாற்று வேலை ஆகும்.
விவசாயிகளின் உற்பத்தி செலவை கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்யும் அரசு 2022-ம் ஆண்டில் வருவாயை 2 மடங்காக உயர்த்துவோம் என்பது விவசாயிகளை ஏமாற்றும் முயற்சி ஆகும். இந்த இடைக்கால பட்ஜெட் விவசாயிகளை அழிக்க துடிக்கும் மோடி அரசின் மோசடி பட்ஜெட் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார். #prpandian #budget2019 #pmmodi