search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிஆர் பாண்டியன்"

    • மத்திய அரசு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் மின்சாரத்தை ரத்து செய்து விட்டனர்.
    • டெல்லிக்குள் நுழைந்து விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் அருகே திருவோணத்தில், காவிரி விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 10-ம் தேதி தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் சார்பாக, தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து 150க்கும் மேற்பட்ட இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.


    தொடர்ந்து அமைதியான முறையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு மத்திய அரசு துணை ராணுவத்தை கொண்டு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து போராடிவரும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்து சுமூகமாக பேசி தீர்ப்போம் என்று கூறிவிட்டு இதுவரை முறையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

    தொடர்ந்து மத்திய அரசு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் மின்சாரத்தை ரத்து செய்து விட்டனர். 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீண்டும் டெல்லிக்குள் நுழைந்து விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்த்தோம்.
    • தமிழகத்தில் இருந்தும் டெல்லியை நோக்கி விவசாயிகள் சென்ற வண்ணம் உள்ளனர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை ரெயில் நிலையத்தில் இன்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரதமர் அளித்த உறுதி அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது. வேளாண் விரோத சட்டம் திரும்ப பெறப்பட்டது.

    இதே போல் லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்த்தோம். அதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை.

    இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பிரதமர் ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகள் இடம் பெறும். குறிப்பாக லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க சட்டம் இயற்றப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி ஒரு எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது ஏமாற்றத்தை அளித்தது.

    இந்த நிலையில் கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாபில் இருந்து கடந்த 10 நாட்களாக லட்சக்கணக்கான விவசாயிகள் 13-ந் தேதி டெல்லிக்குள் நுழைந்து போராட்டம் நடத்துவதற்காக சென்று கொண்டுள்ளனர். நேற்று விவசாயிகளின் போராட்ட குழு ஹரியானா மாநில எல்லையை அடைந்தது.

    இந்த சூழ்நிலையில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பஞ்சாபில் விவசாய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 8 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று மத்திய அமைச்சர் கேட்டார். ஆனால் விவசாயிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து நாளை ( திங்கள் கிழமை ) மாலை 3 மணிக்கு பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் 5-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் குழு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதனை ஏற்றுக் தமிழ்நாடு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் பங்கேற்கிறேன். இதற்காக நான் தஞ்சையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் சென்று அங்கிருந்து சண்டிகருக்கு செல்கிறேன். அங்கு மத்திய அமைச்சர்கள் குழு நடத்தும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறேன்.

    இதில் லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை, டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறுதல், விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் இருக்கும் என நம்புகிறேன். இது ஒரு புறம் இருக்க போராட்டம் மறுபுறம் நடந்து வருகிறது. தமிழகத்தில் இருந்தும் டெல்லியை நோக்கி விவசாயிகள் சென்ற வண்ணம் உள்ளனர்.

    இருந்தாலும் நாளை நடக்கும் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பயிர்கள் கருகுவதை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீரை திறக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.
    • கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக மேட்டூர் அணையை திறக்க நீர்ப்பாசன துறை முன்வர வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயை, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர்.பாண்டியன் சந்தித்து டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி கருகி வரும் சம்பா, தாளடி நெற்பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

    பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி சம்பா, தாளடி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. காவிரியில் தண்ணீர் திறப்பு குறித்து முடிவு எடுக்கிற அதிகாரம் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு தான் வழங்கப்பட்டிருந்தது. இது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்படும் நடவடிக்கையாகும். நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட பிறகு 4 மாவட்ட கலெக்டரிகளின் பரிந்துரையை ஏற்று மேட்டூர் அணை திறப்பதையும், அடைப்பதையும் வாடிக்கையாக பின்பற்றப்படுகிறது.

    தற்போதைய தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நீர் பாசன துறையின் நிர்வாக அதிகாரத்திற்குள் தலையிடுவதும், தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்கிற நோக்கில் பயிர்கள் கருகுவதை காப்பாற்ற முயற்சிக்காமல் தண்ணீரை திறக்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.

    எனவே கருகி வரும் நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக மேட்டூர் அணையை திறக்க நீர்ப்பாசன துறை முன்வர வேண்டும் என வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வேளாண் நிதிநிலை அறிக்கைகளை படித்து பல தரப்பட்ட விவசாயிகளும், அறிஞர்களும் பாராட்டி வருகின்றனர்.
    • விவசாயிகளின் தேவை என்ன என்பதை அறிந்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது.

    சென்னை:

    வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 3 வருடங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளாமலும் அறிந்து கொள்ளாமலும் ரூ.300 கோடி மதிப்பீட்டில் வெறும் தென்னங்கன்று மட்டும் வழங்கியதாக கூறுவது திட்டத்தின் தனித்தன்மையை முழுமையாக புரிந்து கொள்ளாதவர்களின் பிதற்றலாகும்.

    திண்டிவனம், தேனி, மணப்பாறையில் உணவு பூங்கா அமைப்பது என்பது இன்று விதைத்து நாளை முளைக்கும் செயல் அல்ல. இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்தும் வகையில் நிலம் கையகப்படுத்தப்பட்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நபார்டு வங்கியின் ஒப்புதலும் பெறப்பட்டு விட்டது. இதுபோன்ற திட்டங்கள் செயல்வடிவம் பெற்று நடைமுறைக்கு வரும்போது தான் முழு பலனும் விவசாயிகளுக்கு சென்று சேரும்.

    கடந்த வேளாண் பட்ஜெட்டில் வாசித்த பல திட்டங்கள் இந்த ஆண்டிலும் வார்த்தை மாறாமல் படித்ததாக கூறுவது நிதிநிலை அறிக்கையை முழுவதுமாக படிக்காமல் கருத்து கூறுவது முறையல்ல. மதிப்பு கூட்டல் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது.

    வேளாண் நிதிநிலை அறிக்கைகளை படித்து பல தரப்பட்ட விவசாயிகளும், அறிஞர்களும் பாராட்டி வருகின்றனர். விவசாயிகளின் தேவை என்ன என்பதை அறிந்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது. ஆக்கப்பூர்வமான கருத்துகள் ஏதும் இருந்தால் அதனை அரசுக்கு தெரியப்படுத்தினால் அதனை வரவேற்க இந்த அரசு எப்போதும் தயாராக உள்ளது. அதை விடுத்து 'வெறும் வாயில் வடை சுடும் பட்ஜெட்' என்று கூறுவது வேளாண்மையை பற்றி சற்றும் தெரியாமல் பட்ஜெட் முக்கியத்துவத்தை உணராமல் எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பேசுபவர்களின் கருத்தாக இருக்கலாம்.

    முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருப்பவர்கள் வெளியிட்ட கருத்தாகும்.

    முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை தயார் செய்யும் முன்னர் விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அக்கூட்டத்திற்கு வருகை புரிந்த பி.ஆர்.பாண்டியன் எந்தவித ஆக்கப்பூர்வமான கருத்தினை தெரிவிக்காமல் இருந்துவிட்டு அல்லது எந்த கருத்தும் தெரிவிக்க முடியாத நிலையில், விவசாயமே பார்க்காத நபர் ஒருவர் தற்பொழுது விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நிலக்கரி திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பது தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மன்னார்குடி:

    தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக விவசாயிகளும், பொதுமக்களும் தீவிரமாக போராடி பேரழிவிருந்து தூத்துக்குடி மாவட்டத்தை பாதுகாத்தனர். போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிக்கும் விதத்தில் தமிழக மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக கவர்னர் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள போது, மாநில அரசின் கருத்தை கேட்காமலேயே ஒப்புதலை பெறாமலே கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக நிலக்கரி திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    அதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு, முதலமைச்சர் எழுத்துப் பூர்வமாக பிரதமருக்கும் கடிதம் எழுதி இரண்டு தினங்கள் கடந்துவிட்டது. இதுவரையிலும் பிரதமர் அலுவலகம் கடிதம் குறித்தும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் சட்டமன்ற தீர்மானத்திற்கும் மதிப்பளித்து தனது நிலையை தெளிவுபடுத்த முன்வரவில்லை.

    இந்த நிலையில் சென்னையில் நாளை பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பது தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கவர்னருக்கு கண்டனம் தெரிவித்தும், நிலக்கரி திட்டம் குறித்து பதில் அளிக்க மறுக்கும் பிரதமருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில் விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் அழிந்தது அழிந்ததுதான். அதற்கு விடை தெரியவில்லை.
    • நெல்லின் ஈரப்பதத்தை அறிவிக்கும் முடிவானது தற்காலிகமாக இருக்கக்கூடாது, அது நிரந்தரமாக இருக்க வேண்டும்.

    திருச்சி:

    நெல்லின் ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப் புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-

    நெல்லின் ஈரப்பதத்தை மத்திய அரசு 20 சதவீதமாக உயர்த்தி அனுமதி வழங்கியுள்ளது வெறும் கண் துடைப்பு நாடகம். மேலும் இது காலம் கடந்த நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

    கடற்பரப்பு அதிகம் கொண்ட டெல்டா மாவட்டங்களில் இயற்கை சீற்றங்கள் மற்றும் அதன் மூலம் பெய்யும் பருவம் தவறிய மழையும் எப்போதும் விவசாயத்திற்கு ஏற்றதாக இருந்தது கிடையாது.

    அதேபோல் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் அழிந்து சேதமடைந்தன.

    தற்போது நல்ல வெயில் அடித்து அனைத்து விவசாய நிலங்களிலும் அறுவடை என்பது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி தற்போதுதான் மத்திய அரசு அனுமதியே வழங்கியுள்ளது.

    மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் அழிந்தது அழிந்ததுதான். அதற்கு விடை தெரியவில்லை. இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்க நெல்லின் ஈரப்பதம் உள்ளிட்டவைகளை உறுதி செய்யும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். அதற்கான முன்மொழிவுகளை மாநில அரசு உடனடியாக மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.

    அதன் மூலம் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு சிறப்பு அதிகாரத்தை பெற முயற்சிக்க வேண்டும். அப்படி பெற்றால்தான் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற முடியும். நெல்லின் ஈரப்பதத்தை அறிவிக்கும் முடிவானது தற்காலிகமாக இருக்கக்கூடாது, அது நிரந்தரமாக இருக்க வேண்டும்.

    இரண்டு பருவ கால மழையை கொண்டுள்ள தமிழ்நாட்டில் வருங்காலங்களில் மாநில அரசே முடிவெடுக்கும் அதிகாரத்தை பெறவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் எந்திரத்தை இறக்கி அறுவடை செய்ய முடியாத சூழல் நிலவுகிறது.
    • தொடர் மழையால் பயிர்களை காப்பாற்ற முடியாமல் போகுமோ என விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முதலில் அவர் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர், மேலையூர், குலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை பார்வையிட்டார். வயலில் இறங்கி பயிர்கள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார். விவசாயிகளிடம் பயிர் சேதம் குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்து மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான சம்பா பயிர்கள் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் எந்திரத்தை இறக்கி அறுவடை செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. குறைந்தது ஒரு வாரத்திற்காவது மழை இன்றி வெயில் அடித்தால் மட்டுமே தண்ணீர் வடிந்து அறுவடை செய்யும் நிலை உள்ளது. தற்போது தொடர் மழையால் பயிர்களை காப்பாற்ற முடியாமல் போகுமோ என விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.

    உடனடியாக தமிழ்நாடு அரசு டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை ஆய்வு செய்து கணக்கெடுத்து போர்க்கால அடிப்படையில் இழப்பீடு தொகை வழங்க வேண்டும். முதலமைச்சரும் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆலைக்கு எதிராக போராடக்கூடிய விவசாயிகளுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடுக்கிறது.
    • தமிழக காவல்துறையினர் ஆலைக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள். இதுவும் தமிழக விவாசயிகளுக்கான துரோகமாகும்.

    திருச்சி:

    மத்திய அரசு நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய குழு அமைத்து தீர்வு காணப்படும் என்று அறிவித்தது. ஆனால் அது தொடர்பாக தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இதுவரை விலை நிர்ணயம் செய்வதற்கான எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் மத்திய அரசு ஏமாற்றி வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே மத்திய அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்ய திருச்சியில் இன்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    மாநில கவுரவ தலைவர் எம்.பி.ராமன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பாரூக், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனியப்பன், மாநில அமை்பபு செயலாளர் ஸ்ரீதர், நெல்லை மாவட்ட நிர்வாகி செல்லதுரை, மதுரை ஆதிமூலம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற போது, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரட்டிப்பு லாபம் தருவதாக கூறினார்கள். அதனை நிறைவேற்றவில்லை. அதைத்தொடர்ந்து டெல்லியில் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு ஓராண்டு காலம் போராட்டம் நடத்தினார்கள்.

    அப்போது பிரதமர் நரேந்திர மோடி குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க குழு அமைப்பதாக உறுதி அளித்தார். ஆனால் போராட்டம் திரும்பப்பெறப்பட்டு ஓராண்டு காலம் நிறைவு பெற்ற பின்னரும், ஆதார விலை கொடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் பிப்ரவரி மாதம் 1-ந்தேதி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.

    இதில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இரட்டிப்பு விலை வழங்கவும், குறைந்தபட்ச ஆதார விலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையெனில் வருகிற மார்ச் 1-ந்தேதி குமரி முதல் டெல்லி வரை மேற்கண்ட அமைப்பு சார்பில் நீதி கேட்டு வாகன பயணம் மேற்கொள்வோம். இந்த பயணத்தின்போது செல்லும் வழியில் 12 மாநில முதல்வர்களை சந்திக்க இருக்கிறோம்.

    இந்த போராட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும். அதேபோன்று தமிழக முதல்-அமைச்சர் கடந்த 2021 தேர்தல் அறிக்கையின்போது, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். தற்போது 3-வது பருவ சம்பா கொள்முதல் தொடங்கி விட்டது.

    தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கவேண்டும். கலைஞர் ஆட்சியின் கொள்கைக்கு மாறாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுப்பது தமிழக அரசு விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்.

    திருப்புவனம் ஆரூண் சர்க்கரை ஆலையில் 2015 முதல் 2018 வரை விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத்தொகையினை வழங்கவில்லை. அதேபோல் 13 ஆயிரம் விவசாயிகளின் பேரில் அந்த சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.300 கோடி வங்கிகளில் கடன் பெற்று, அதனால் விவசாயிகள் வங்கிகளின் நடவடிக்கைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதனை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தியபோது, அன்றைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆதரவளித்தார்.

    மேலும் அந்த ஆலை அரசுடமையாக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். ஆனால் இன்று மற்றொரு நபருக்கு அந்த ஆலை கைமாறியிருப்பதாக சொல்கிறார்கள். ஆலைக்கு எதிராக போராடக்கூடிய விவசாயிகளுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடுக்கிறது.

    தமிழக காவல் துறையினர் ஆலைக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள். இதுவும் தமிழக விவாசயிகளுக்கான துரோகமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசு மத்திய அரசிடம் தெரிவித்து மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
    • பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு 100 சதவீதம் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி தாலுக்கா கீழையூர் கிராமத்தில் அய்யாவையனாற்றில் தண்ணீர் வடியாமல் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை தழிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 மணி நேரத்தில் 44 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது.

    இதனால் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கி உள்ளது.

    அதனால் தமிழக அரசு மத்திய அரசிடம் தெரிவித்து மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அத்துடன் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு 100 சதவீதம் கிடைப்பதற்கு ஆவன செய்ய வேண்டும். காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் நிலையில்லாமல் காப்பீட்டு நிறுவனங்கள் பலன் தரும் வகையில் சட்ட திட்டங்கள் இருப்பதை மாற்றி அமைக்க வேண்டும்.

    2020-21 ம் ஆண்டில் பயிர் காப்பீடு திட்டத்தில் ஹெக்டருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அது ரூ.13,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.30,000 மானியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×