search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லின் ஈரப்பதத்தை உறுதி செய்யும் அதிகாரத்தை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கவேண்டும்- பி.ஆர்.பாண்டியன்
    X

    நெல்லின் ஈரப்பதத்தை உறுதி செய்யும் அதிகாரத்தை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கவேண்டும்- பி.ஆர்.பாண்டியன்

    • மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் அழிந்தது அழிந்ததுதான். அதற்கு விடை தெரியவில்லை.
    • நெல்லின் ஈரப்பதத்தை அறிவிக்கும் முடிவானது தற்காலிகமாக இருக்கக்கூடாது, அது நிரந்தரமாக இருக்க வேண்டும்.

    திருச்சி:

    நெல்லின் ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப் புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-

    நெல்லின் ஈரப்பதத்தை மத்திய அரசு 20 சதவீதமாக உயர்த்தி அனுமதி வழங்கியுள்ளது வெறும் கண் துடைப்பு நாடகம். மேலும் இது காலம் கடந்த நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

    கடற்பரப்பு அதிகம் கொண்ட டெல்டா மாவட்டங்களில் இயற்கை சீற்றங்கள் மற்றும் அதன் மூலம் பெய்யும் பருவம் தவறிய மழையும் எப்போதும் விவசாயத்திற்கு ஏற்றதாக இருந்தது கிடையாது.

    அதேபோல் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் அழிந்து சேதமடைந்தன.

    தற்போது நல்ல வெயில் அடித்து அனைத்து விவசாய நிலங்களிலும் அறுவடை என்பது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி தற்போதுதான் மத்திய அரசு அனுமதியே வழங்கியுள்ளது.

    மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் அழிந்தது அழிந்ததுதான். அதற்கு விடை தெரியவில்லை. இதுபோன்ற பிரச்சினைகளை தீர்க்க நெல்லின் ஈரப்பதம் உள்ளிட்டவைகளை உறுதி செய்யும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். அதற்கான முன்மொழிவுகளை மாநில அரசு உடனடியாக மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.

    அதன் மூலம் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு சிறப்பு அதிகாரத்தை பெற முயற்சிக்க வேண்டும். அப்படி பெற்றால்தான் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற முடியும். நெல்லின் ஈரப்பதத்தை அறிவிக்கும் முடிவானது தற்காலிகமாக இருக்கக்கூடாது, அது நிரந்தரமாக இருக்க வேண்டும்.

    இரண்டு பருவ கால மழையை கொண்டுள்ள தமிழ்நாட்டில் வருங்காலங்களில் மாநில அரசே முடிவெடுக்கும் அதிகாரத்தை பெறவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×