search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணிக்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்
    X

    பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணிக்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

    • நிலக்கரி திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பது தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மன்னார்குடி:

    தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக விவசாயிகளும், பொதுமக்களும் தீவிரமாக போராடி பேரழிவிருந்து தூத்துக்குடி மாவட்டத்தை பாதுகாத்தனர். போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிக்கும் விதத்தில் தமிழக மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக கவர்னர் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள போது, மாநில அரசின் கருத்தை கேட்காமலேயே ஒப்புதலை பெறாமலே கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக நிலக்கரி திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    அதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு, முதலமைச்சர் எழுத்துப் பூர்வமாக பிரதமருக்கும் கடிதம் எழுதி இரண்டு தினங்கள் கடந்துவிட்டது. இதுவரையிலும் பிரதமர் அலுவலகம் கடிதம் குறித்தும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் சட்டமன்ற தீர்மானத்திற்கும் மதிப்பளித்து தனது நிலையை தெளிவுபடுத்த முன்வரவில்லை.

    இந்த நிலையில் சென்னையில் நாளை பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பது தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கவர்னருக்கு கண்டனம் தெரிவித்தும், நிலக்கரி திட்டம் குறித்து பதில் அளிக்க மறுக்கும் பிரதமருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில் விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×