செய்திகள்

மகன்-3 மகள்கள் இருந்தும் கவனிக்க யாரும் இல்லாததால் வயதான தம்பதி தற்கொலை

Published On 2019-02-02 06:15 GMT   |   Update On 2019-02-02 06:15 GMT
கவனிக்க யாரும் இல்லாததால் கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தபுரம் மணி நகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 65). இவரது மனைவி காளியம்மாள் (55). இவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

பழனிசாமி, அவரது மனைவி காளியம்மாள் ஆகியோர் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் பழனிசாமி வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாத நிலையில் இருந்தார். அவரது மனைவியும் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

2 பேரும் தனியாக வசித்ததால் கவனிக்க யாரும் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் 2 பேரும் மனவேதனை அடைந்து காணப்பட்டனர்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த கணவன்-மனைவி இருவரும் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி கடந்த 31-ந் தேதி இரவு 2 பேரும் வி‌ஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

மறுநாள் இவர்களது வீட்டுக்கதவு நீண்ட நேரமாக திறக்காததால் அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டு கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது 2 பேரும் படுக்கையில் பிணமாக கிடப்பது பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் பழனிசாமி, காளியம்மாளின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News