செய்திகள்

ராயக்கோட்டையில் தறி தொழிலாளி கொலை- மனைவியின் கள்ளக்காதலன் வெறிச்செயல்

Published On 2018-12-27 10:28 GMT   |   Update On 2018-12-27 10:28 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக கூறி தறி தொழிலாளி கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள தொட்டபேளூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஸ் (வயது 35). தறி தொழிலாளி.

இவரது மனைவி அம்பிகா (28). இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி சஞ்சனாஸ்ரீ(10), தன்யஸ்ரீ(8) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

அம்பிகா பெங்களூருவில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். தினமும் கம்பெனி வேனில் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பி வந்துவிடுவார்.

அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராமமூர்த்தி (23). விவசாயி. இவருக்கு திருமணமாகி சுமா என்ற மனைவியும், ஒரு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையும் உள்ளது.

அம்பிகாவுக்கும், ராமமூர்த்திக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த மாதேஸ் அம்பிகாவை கண்டித்ததார். ஆனாலும், அம்பிகாவும், ராமமூர்த்தியும் தொடர்ந்து கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக மாதேஸ் இருப்பதால் அவரை கொலை செய்ய ராமமூர்த்தி முடிவு செய்தார்.

இந்த நிலையில் நேற்று அம்பிகா வேலைக்காக கார்மெண்ட்சுக்கு சென்றுவிட்டார். அவரது 2 பெண் குழந்தைகளும் பள்ளி விடுமுறை காரணமாக தேன்கனிக்கோட்டையில் உள்ள அம்பிகாவின் தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

இரவு 8 மணியளவில் மாதேஸ் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ராமமூர்த்தி வீட்டிற்குள் சென்று மாதேசின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

அப்போது அம்பிகா வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது மாதேஸ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே அங்கு திரண்டனர்.

இதுகுறித்து அவர்கள் கெலமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், கெலமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராகவன் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மாதேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த அம்பிகாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய ராமமூர்த்தியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News