செய்திகள்

தமிழக அரசை வஞ்சித்தால் மத்திய அரசோடு போராடுவோம்- ராஜன் செல்லப்பா பேட்டி

Published On 2018-12-01 11:56 GMT   |   Update On 2018-12-01 11:56 GMT
மத்திய அரசு தொடர்ந்து தமிழக அரசை வஞ்சித்து வந்தால் தமிழக அரசு நிச்சயமாக மத்திய அரசோடு போராடும் என்று ராஜன் செல்லப்பா எம்எல்ஏ கூறினார். #rajanchellappamla #tngovt #centralgovernment

மதுரை:

மதுரை கே .புதூர் அருகே உள்ள மூன்றுமாவடியில் தனியார் பள்ளியில் அரசு வழங்கும் விலையில்லா சைக்கிள்களை மாணவிகளுக்கு மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பா இன்று வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஜா புயலால் பாதித்த அனைத்து பகுதிகளுக்கும் தேவையான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த அரசை விமர்சிக்க எந்த அரசியல் தலைவருக்கும் அருகதை இல்லை.

எதிர்க்கட்சித் தலைவர் குறை இருந்தால் அந்தக் குறையை சுட்டிக் காட்ட வேண்டும். ஆனால் அதையே திரித்து சொல்லக்கூடாது. மத்திய அரசு இன்னும் நிவாரண நிதியை அறிவிக்காத போதிலும் தமிழக அரசு அனைத்து பகுதிகளிலும் நிவாரணத்தை அளித்து வருகிறது.

மத்திய அரசிடம் நிவாரணம் கேட்பது நமது கடமை. மத்திய அரசு அதில் எவ்வளவு நிதியை கொடுத்தாலும் தமிழக அரசு யாரையும் விட்டுக் கொடுக்காமல் அனைவருக்கும் நிவாரணம் முழுமையாக கொடுத்து வருகிறது.

மத்திய அரசு வரும் காலகட்டங்களில் தானாக தேடி வந்து கேட்ட அளவிற்கு முழுமையான நிதியை கொடுக்கும் நிலை வரும்.

தமிழகத்தில் தற்போதுள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அண்ணா, கலைஞர், எம்.ஜி. ஆர்., ஜெயலலிதாவுடன் ஒப்பிடக்கூடாது.

தற்போது உள்ள ஸ்டாலின், வைகோ தமிழிசை சவுந்தரராஜன், புதிதாக உருவாகி இருக்கிற தலைவர்களை விட அவருக்கு அனைத்து செயல் திறமையும் உள்ளது.

மத்திய அரசு தமிழக அரசிற்கு முழுமையான நிதியை தர வேண்டும். உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் மத்திய அரசு தொடர்ந்து தமிழக அரசை வஞ்சித்து வந்தால் தமிழக அரசு நிச்சயமாக மத்திய அரசோடு போராடும்.

மேற்கண்டவாறு அவர் கூறினார். #rajanchellappamla #tngovt #centralgovernment 

Tags:    

Similar News