மன்னார்குடி அருகே பன்றிக்காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலி
மன்னார்குடி:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு- பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழப்பு எண்ணிக் கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பன்றிக்காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நீடாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுகந்தி. இவர்களது மகள் நித்தியஸ்ரீ (வயது 3).
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மயிலாடு துறையில் உள்ள சுகந்தி தனது தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு நித்தியஸ்ரீக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
உடனே அவர்கள் மயிலாடு துறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று காட்டினர். அங்கு நித்தியஸ்ரீயை பரிசோதித்த டாக்டர் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே மேல் சிகிச்சை தேவைப்படும் என்று தெரிவித்தனர்.
அதன் பின்னர் ஜெகநாதன் , மகள் நித்திய ஸ்ரீயை திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த போது பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு தனி சிறப்பு வார்டில் சிறுமிக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சிறுமி நித்தியஸ்ரீ சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
பன்றிக்காய்ச்சலுக்கு குழந்தை பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தற்போது ஜெகநாதனுக்கும், அவரது மனைவி சுகந்திக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பன்றி காய்ச்சலுக்கு மகளை பறிகொடுத்த பெற்றோர்களும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதால் நீடாமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #swineflu