என் மீது வழக்கு தொடராவிட்டால் அமைச்சர் தங்கமணி மீது வழக்கு தொடருவேன் - மு.க.ஸ்டாலின்
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழக மின்சார வாரியம் காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்து இருப்பதாகவும், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் நான் கூறினேன்.
இதற்கு அமைச்சர் தங்கமணி அளித்துள்ள பதில் தெளிவாக இல்லை. இதற்காக என்மீது வழக்கு தொடருவேன் என்றும் கூறியுள்ளார்.
இதேபோல் குட்கா ஊழலை முதன் முதலில் நான் வெளிக்கொண்டு வந்தேன். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என் மீது வழக்கு தொடரப்போவதாக கூறினார். ஆனால் இதுவரை அவர் என் மீது எந்த வழக்கும் தொடரவில்லை. ஆனால் நான்தான் அவர் மீது வழக்கு தொடர்ந்தேன்.
இப்போது அமைச்சர் தங்கமணி என்மீது வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளார். காற்றாலை மின்சார கொள்முதலில் நடந்த ஊழலுக்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன். எனவே அமைச்சர் தங்கமணி என்மீது வழக்கு தொடர தயாரா?
ஒருவாரம் வரை காத்திருக்கிறேன், அவர் என் மீது வழக்கு தொடரட்டும். இல்லையெனில் நான் அவர் மீது வழக்கு தொடருவேன். அமைச்சர் தங்கமணி மீது நான் கூறிய புகார் ஆதாரப்பூர்வமானது. அறிக்கையில் நான் கூறிய விவரங்களுக்கு அமைச்சர் தெளிவாக பதில் அளிக்கவில்லை.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார். #TNMinister #Thangamani #DMK #MKStalin