செய்திகள்

கூடுதல் பயணிகளை கவர 7 நிமிடத்துக்கு ஒரு ‘மெட்ரோ’ ரெயில்

Published On 2018-09-07 07:33 GMT   |   Update On 2018-09-07 07:33 GMT
மெட்ரோ ரெயிலில் கூடுதல் பயணிகளை கவரும் வகையில் ரெயில்கள் விடப்படும் இடைவெளி நேரத்தை குறைக்க மெட்ரோ ரெயில் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். #chennai #Metrotrain
சென்னை:

சென்னை நகரில் துரித போக்குவரத்துக்காக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில் ஒரு வழித்தடத்தில் சென்ட்ரலில் இருந்து எழும்பூர், கோயம்பேடு, ஆலந்தூர் வழியாக மீனம்பாக்கத்துக்கும், மற்றொரு வழித்தடத்தில் மீனம்பாக்கத்தில் இருந்து ஆலந்தூர், சைதாப்பேட்டை, டி.எம்.எஸ். வரையிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் டி.எம்.எஸ். - சென்ட்ரல் இணைக்கப்பட்டதும் இந்த திட்டம் நிறைவு பெறும்.

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பாதுகாப்பு வசதிகள், இணைப்பு வாகன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் குளு, குளு வசதியுடன் ரெயிலில் நெருக்கடி, இன்றியும் சுற்றுச்சூழல் மாசு இல்லாமலும் சொகுசாக பயணம் செய்ய முடிகிறது.

இதற்கிடையே மெட்ரோ ரெயிலில் கூடுதல் பயணிகளை கவரும் வகையில் ரெயில்கள் விடப்படும் இடைவெளி நேரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்டிரல்-விமான நிலைய வழித்தடத்தில் நேரடி ரெயில்கள் நெரிசல் மிகுந்த நேரங்களில் அதிக அளவிலும், நெரிசல் இல்லாத நேரங்களில் குறைந்த அளவிலும் இயக்கப்படுகிறது.

அதாவது காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நெரிசல் நேரங்கள் ஆகும். இந்த சமயத்தில் 5 நிமிடத்துக்கு ஒரு ரெயிலும், மற்ற நேரங்களில் 20 நிமிடத்துக்கு ஒரு ரெயிலும் விடப்படுகிறது.

இதில் நேரடி ரெயில்கள் 20 நிமிடத்துக்கு ஒன்றும் ஆலந்தூர் வரையிலான குறைந்த தூரங்களுக்கான ரெயில்கள் 7 நிமிடங்களுக்கு ஒன்றும் இயக்கப்படுகிறது. இந்த நேரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேரடி ரெயில்கள் 14 நிமிடத்துக்கு ஒன்றும் மற்ற நேரங்களில் 7 நிமிடத்துக்கு ஒன்றும் இயக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

விரைவில் இது அமலுக்கு வரும் என்றும் இதன் மூலம் நீண்ட நேரம் காத்திருப்பது குறையும் என்றும் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்தனர். #Chennai #Metrotrain
Tags:    

Similar News