செய்திகள்

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரசை பலப்படுத்த வேண்டும் - திருநாவுக்கரசர்

Published On 2018-09-04 08:51 GMT   |   Update On 2018-09-04 08:51 GMT
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரசை பலப்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #congress

சென்னை:

சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர்கள் சென்னா ரெட்டி, சஞ்சய்தத் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல், மாவட்ட வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, ரபேல் போர் விமான விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கட்சியை வளர்க்க மேலும் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும். பூத் கமிட்டிகளை அமைப்பதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்த விமானத்தில் மாணவி சோபியா பா.ஜனதாவுக்கு எதிராக கோ‌ஷமிட்டதால் அவர் மீது போலீசில் புகார் கொடுத்து கைது செய்து இருக்கிறார்கள். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாகத்தை மதிக்காத இந்த போக்கு ஏற்கத்தக்கது அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராமசாமி, விஜயதரணி, நிர்வாகிகள் நாசே ராமச்சந்திரன், ரூபி மனோகரன், நாசே ராஜேஷ், சிரஞ்சீவி, ரங்கபாஷ்யம், மணிபால், திருவான்மியூர் மனோகர், திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News