முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை மதுரை வருகை
மதுரை:
அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் (வயது 90) நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கு நேற்று மதியம் நடந்தது.
தமிழக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க. மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டு மறைந்த ஒச்சம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அமைச்சர் செல்லூர் ராஜூவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
அமைச்சர் செல்லூர் ராஜூவின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 6 மணிக்கு மதுரை வருகிறார்.
சேலத்தில் இருந்து காரில் வரும் எடப்பாடி பழனிசாமி மதுரை செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோட்டில் உள்ள அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டுக்குச் செல்கிறார்.
அங்கு மறைந்த ஒச்சம்மாள் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தும் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்.
பின்னர் காரில் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்கிறார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. #cmEdappadipalanisamy #ministersellurraju