செய்திகள்

வடசென்னை அனல் மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

Published On 2018-08-25 04:32 GMT   |   Update On 2018-08-25 04:32 GMT
வடசென்னை அனல் மின்நிலையத்தின் முதல் நிலையில் உள்ள முதல் அலகின் கொதிகலன்களில் ஏற்பட்ட பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புதுநகரில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு 2 நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.

இதில் முதல் நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதேபோல் 2-ம் நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தநிலையில் முதல் நிலையில் உள்ள முதல் அலகின் கொதிகலன்களில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டது. இதன் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

பழுதான கொதிகலன்களை சரிசெய்யும் பணியில் மின் ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் பழுது சரி செய்யப்பட்டு அந்த அலகில் மின் உற்பத்தி தொடங்கும் என்று அனல் மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே அம்பத்தூர் கள்ளிக்குப்பம் ராஜிவ்காந்தி நகரில் திடீர், திடீரென மின்தடை ஏற்பட்டு வருகிறது.

தினமும் குறைந்தது 4 முறை மின்தடை ஏற்படுவதால் பொது மக்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர். மின் வாரிய அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் சரிவர பதில் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
Tags:    

Similar News