செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சம் கன அடியை எட்டியது

Published On 2018-08-11 03:39 GMT   |   Update On 2018-08-11 03:39 GMT
கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டதையடுத்து, மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியை எட்டியது. #Metturdam #Cauvery
மேட்டூர்:

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் மீண்டும் நிரம்பின. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.



நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிப்பதால் கர்நாடக அணைகளில் நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை கபினி அணையில் இருந்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 63 ஆயிரம் கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மொத்த 1.43 லட்சம் கனஅடி தண்ணீர் வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில்  தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70,000 கன அடியில் இருந்து இன்று 1,00,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.80 அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரித்ததையடுத்து, நீர்திறப்பு வினாடிக்கு 50 ஆயிரத்தில் இருந்து  60 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் பவானிசாகர் அணையும் நிரம்பி வருகிறது. அணையின் நீர்மட்டம் 98.40 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6924 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 3800 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. #Metturdam #Cauvery

Tags:    

Similar News