செய்திகள்

9 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

Published On 2018-07-18 06:28 GMT   |   Update On 2018-07-18 06:28 GMT
சூறாவளி காற்று ஓய்ந்து 9 நாட்களுக்கு பின் ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 600 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். #Fishermenboat

ராமேசுவரம்:

கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. கடல் சீற்றமும் அதிகமாக இருந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டது.

மேலும் மீன்வளத்துறை கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கனை வழங்க வில்லை. ஒரு வாரமாக இதே நிலை நீடித்ததால் மீனவர்கள் வருமானமின்றி தவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் ராமேசுவரம், மண்டபம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் காற்று குறைந்து இயல்பு நிலை திரும்பியது. இதையடுத்து இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மீன் வளத்துறை அறிவித்தது.

அதன்படி 9 நாட்களுக்கு பின் இன்று அதிகாலை அனுமதி டோக்கன் பெற்று ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 600 விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர்.

இதனால் கடந்த ஒரு வாரமாக வெறிச்சோடி காணப்பட்ட ராமேசுவரம் மீண்டும் பரபரப்பாக செயல்பட தொடங்கியது. #Fishermenboat

Tags:    

Similar News