செய்திகள்

அரசியல்வாதிகள் பெயரை சொல்லி துணை நடிகைகளை பாலியலுக்கு அழைத்த விபச்சார புரோக்கர்கள்

Published On 2018-07-14 05:58 GMT   |   Update On 2018-07-14 05:58 GMT
நடிகை ஜெயலட்சுமி விவகாரத்தில் கைதானவர்கள் அரசியல்வாதிகள் பெயரை சொல்லி துணை நடிகைகளை பாலியலுக்கு அழைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை:

தமிழ் நடிகை ஜெயலட்சுமி. இவர் நேபாளி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இவரது வாட்ஸ் அப்புக்கு ஒரு கும்பல் தகவல் அனுப்பி விபச்சார வலை விரித்தது. முக்கிய பிரமுகர்களுடன் உல்லாசமாக இருந்தால் ரூ.30 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று தகவல் அனுப்பி இருந்தது.

இதுகுறித்து நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விபசார தடுப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நடிகைக்கு வாட்ஸ்-அப் மூலம் விபச்சார அழைப்பு விடுத்த சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த முருகப்பெருமான், கவியரசன் என்று தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் வாட்ஸ்-அப் மூலம் பிரபல நடிகைகளை தொடர்பு கொண்டு விபச்சார வலை விரித்துள்ளனர். ரூ.30 ஆயிரம் முதல் ரூ.30 லட்சம் வரை சம்பாதிக்கலாம். உங்கள் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் விருப்பம் இருந்தால் தொடர்புகொள்ளுங்கள் என்று தகவல் அனுப்பி உள்ளனர்.

துணை நடிகைகள் மற்றும் இளம்பெண்களையும் குறிவைத்து விபச்சாரத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதும் தெரிய வந்தது. கைதான 2 பேரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களில் ஏராளமான பெண்களின் புகைப்படங்கள் இருந்தன.

அதில் பிரபல நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் படங்கள் இருந்தன. அவர்களின் வாட்ஸ்-அப்பை ஆய்வு செய்த போது பலருடன் சாட்டிங் செய்துள்ளதும். பெரும்பாலும் துணை நடிகைகளுக்கு தகவல் அனுப்பி உள்ளதும் தெரிய வந்தது.


‘‘ரிலேசன்ஷிப் டேட்டிங் குரூப்’’ என்று வாட்ஸ்- அப்பில் ஆரம்பித்து அதன் மூலம் நடிகைகளுக்கு தகவல்களை அனுப்பி உள்ளனர். ‘டேட்டிங்’ செல்ல விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம். வசதி படைத்தவர்கள், அரசியலில் முக்கிய பொறுப்பிலும், பதவியிலும் இருப்பவர்கள் எங்களிடம் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

அவர்கள் நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க விரும்புகிறார்கள். அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவார்கள் என்று ஆசை வார்த்தைகளை கூறி உள்ளனர். இதுதொடர்பான உரையாடல்கள் இருந்தன.

அவர்களின் செல்போனில் நடிகைகள் படம் மட்டுமின்றி குடும்ப பெண்களின் புகைப்படங்களும் இருந்தன. அதை அவர்கள் பேஸ்புக் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வாட்ஸ்-அப்பில் அனுப்பி உள்ளனர். இவர்கள் உருவாக்கிய வாட்ஸ்-அப் குரூப்பில் பல இளைஞர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களிடம் உரையாடல்கள் நடத்தி விபச்சாரத்துக்கு பேரம் பேசி இருக்கிறார்கள்.

இளைஞர்களிடம் துணை நடிகைகள் மற்றும் இளம் பெண்களின் படங்களை வாட்ஸ்-அப்பில் அனுப்பி விபச்சாரத்துக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.

இந்த விபச்சார விவகாரத்தில் இவர்களுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் முக்கிய பிரமுகர்களின் பெயர்களை சொல்லி நடிகைகளுக்கு ஆசைகாட்டி விபச்சாரத்துக்கு அழைத்துள்ளதாக தெரிகிறது. 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். #ActressJayalakshmi
Tags:    

Similar News