கணவனை கொன்ற வழக்கு: மனைவி -கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
வேலூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பட்டறைப்பள்ளி சின்னராமனூரை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 37). இவரது மனைவி கஸ்தூரி (36). அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (36) என்ற மிட்டாய் வியாபாரியுடன், கஸ்தூரிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.இவர்களின் உல்லாசத்திற்கு சோமசுந்தரம் தடையாக இருந்தார்.
இதையடுத்து, அவரை தீர்த்துக் கட்ட கள்ளக்காதல் ஜோடி திட்டம் போட்டனர். அதன்படி, 2013-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தாத்தூரில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சோமசுந்தரத்தை, அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் நைசாக பேசி அழைத்து வந்தனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சோமசுந்தரத்தை அழைத்துச் சென்று அளவுக்கு அதிகமாக மது ஊற்றி கொடுத்து, செல்போன் சார்ஜர் வயரால் கழுத்தை சுற்றி இறுக்கி கொடூரமாக கொலை செய்தனர். இது தொடர்பாக, குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கஸ்தூரியையும், கள்ளக்காதலனையும் கைது செய்து, வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை, வேலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பு வக்கீல் அண்ணாமலை வாதாடி வந்தார். இந்த நிலையில், சோமசுந்தரம் கொலை வழக்கில் இன்று நீதிபதி வெற்றிச்செல்வி தீர்ப்பு வழங்கினார்.
கள்ளக்காதல் தகராறில் கணவரை கொன்ற கஸ்தூரி மற்றும் கள்ளக்காதலன் கோவிந்தராஜிக்கு ஆயுள் தண்டனையும், இருவருக்கும் தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி உத்தர விட்டார். #tamilnews