செய்திகள்

குளுகுளு சீசன் தொடங்கியது - கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2018-04-22 10:00 GMT   |   Update On 2018-04-22 10:00 GMT
கோடை விடுமுறையையொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
பெருமாள்மலை:

தமிழகத்தில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் குடும்பத்துடன் பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மலைஸ்தலங்களுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. காலை நேரத்தில் வெயில் அடித்தாலும் மாலையில் குளுகுளு சீசன் நிலவி வருவதால் பொதுமக்கள் ஆனந்தமாக தங்கள் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.

இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான தூண்பாறை, மோயர்பாய்ண்ட், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பைன் பாரஸ்ட் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் ஆனந்தமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியே இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

ஒரே சமயத்தில் ஏராள மான சுற்றுலா வாகனங்கள் வந்ததால் கொடைக்கானல்- வத்தலக்குண்டு மற்றும் கொடைக்கானல்-பழனி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நகர் பகுதியிலும் தற்காலிக கடைகள் முளைத்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையால் ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News