செய்திகள்

டிரைவிங் பழகிய போது லாரி மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி

Published On 2018-04-21 05:22 GMT   |   Update On 2018-04-21 05:22 GMT
டிரைவிங் பழகிய போது லாரி மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரது நண்பர்களான திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்த வனிதம் பகுதியை சேர்ந்த தேவா (வயது 45) மற்றும் திருவாரூர் விடையாள் புரத்தை சேர்ந்த சரவணன் (40). ஆகியோர் நேற்று இரவு தஞ்சைக்கு வந்தனர்.

அவர்கள் டிரைவிங் கற்றுக் கொள்ள பரமேஸ்வரன் காரில் தஞ்சை அருகே உள்ள ஆதி மாரியம்மன் கோவில் பைபாஸ் சாலைக்கு சென்றனர். அங்கு காரை தேவா முதலில் ஓட்டினார். அப்போது கும்பகோணத்தில் எண்ணெய் இறக்கி விட்டு ஒரு லாரி மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை மதுரை ஜெயபுதூர் பகுதியை சேர்ந்த முருகன் (40) என்பவர் ஓட்டி சென்றார்.

லாரி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது தேவா ஓட்டி சென்ற கார் எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தேவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காரில் சென்ற பரமேஸ்வரன், சரவணன் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தேவா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சரவணனும் மருத்துவமனையில் இறந்தார். பரமேஸ்வரன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து தஞ்சை தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News