செய்திகள்
விபத்துகுள்ளான ஆம்னி பஸ்களின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்தது

தியாகதுருகம் அருகே ஆம்னி பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- 2 டிரைவர்கள் பலி

Published On 2018-03-20 04:23 GMT   |   Update On 2018-03-20 04:23 GMT
தியாகதுருகம் அருகே இன்று அதிகாலை ஆம்னி பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தியாகதுருகம்:

சென்னையில் இருந்து கோவையை நோக்கி நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. கோவையை சேர்ந்த டிரைவர் ரமேஷ் (வயது 40) பஸ்சை ஓட்டி வந்தார். பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்.

அந்த பஸ் இன்று அதிகாலை 3 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலத்தில் உள்ள சென்னை-கோவை புறவழிச்சாலையில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது கோவையில் இருந்து சென்னைக்கு 30 பயணிகளுடன் மற்றொரு தனியார் ஆம்னி பஸ் அங்கு வந்தது. அதனை சென்னையை சேர்ந்த டிரைவர் அடைக்கலம் (45) ஓட்டினார். 2 தனியார் ஆம்னி பஸ்களும் மேம்பாலத்தில் திடீரென நேருக்கு நேர் மோதி கொண்டன.

இதில் 2 பஸ்சுகளும் பாலத்தில் கவிழ்ந்தன. பஸ்களின் முன்பக்கம் முழுவதும் பலத்த சேதம் அடைந்தன. இந்த விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர்கள் ரமேஷ் மற்றும் அடைக்கலம் ஆகியோர் பஸ்சின் இடிபாடுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஆம்னி பஸ்களில் வந்த சென்னையை சேர்ந்த நந்தகுமார், சதீஷ்குமார், மகேஷ்வரி, கோவையை சேர்ந்த கணேசன்,வித்யா, சீனாவை சேர்ந்த பப்பையா உள்ளிட்ட 35 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலத்த காயம் அடைந்த 35 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்துகுள்ளான பஸ்கள் பாலத்தில் கவிழ்ந்து கிடந்ததால் சென்னை-கோவை சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News