நாகர்கோவிலில் தொண்டையில் இட்லி சிக்கி 6-ம் வகுப்பு மாணவி பலி
நாகர்கோவில்:
நாகர்கோவிலை அடுத்த இளங்கடை பகுதியை சேர்ந்தவர் ஜெய்லானி. இவரது மனைவி இர்பானா (வயது 45).
இவர்களின் மகள் அப்ரின் (13). அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று காலை தாயாருடன் அமர்ந்து இட்லி சாப்பிட்டார்.
அப்போது தாயாரும் மகளும் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். சந்தோஷமாக உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது அப்ரின் வாயில் இட்லியை வைத்து கொண்டு சிரித்தார். இதில் இட்லி அப்ரினின் தொண்டையில் சிக்கிகொண்டது.
அப்ரின் தொண்டையில் சிக்கிய இட்லி வெளியே வராததால் அவர் மூச்சுவிட முடியாமல் திணறினார். உடனே அவரை பெற்றோரும் உறவினர்களும் சேர்ந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே அப்ரின் பரிதாபமாக இறந்து போனார். இது பற்றி அப்ரினின் தாயார் இர்பானா கோட்டார் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews