செய்திகள்

திருக்கோவிலூர் அருகே தாக்கப்பட்ட சிறுமி உடல்நிலை கவலைக்கிடம்

Published On 2018-03-02 09:51 GMT   |   Update On 2018-03-02 09:51 GMT
திருக்கோவிலூர் அருகே தாக்கப்பட்ட சிறுமி உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்து வருகிறது. உடல்நிலை கவலைக்கிடமான முறையிலேயே அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுச்சேரி:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம் புத்தூரை சேர்ந்தவர் ஏழுமலை.

கடந்த 21-ந் தேதி இரவு இவரது மனைவி ஆராயி (வயது 45), மகள் தனம் (15), மகன் சமயன் (8) ஆகியோர் தனியாக வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது அவர்களை மர்ம கும்பல் தாக்கியது.

இதில் சிறுவன் சமயன் உயிர் இழந்தான். ஆராயி, தனம் ஆகியோர் படுகாயத்துடன் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அவர்கள் இருவரும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாக கூறப்படுகிறது. ஆனால், டாக்டர்களோ, போலீசாரோ அதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இருவருக்கும் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவருமே மயங்கிய நிலையில்தான் ஜிப்மரில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இதையடுத்து ஆராயிக்கு நினைவு திரும்பியது. எனவே, அவர் மட்டும் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டார். இதனால் அவர் உடல்நிலை தேறி விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் மீண்டும் சுயநினைவை இழந்து விட்டார். இதனால் மறுபடியும் அவசர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

படுகாயம் அடைந்த தனத்தின் உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்து வருகிறது. அவருக்கு பல ஆபரே‌ஷன்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆனாலும், உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தலையின் உள்பகுதியில் ரத்தக்கசிவு உள்ளது. அதை குணப்படுத்துவதற்கு டாக்டர்கள் போராடி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல், உடல் உள் உறுப்புகளில் பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

எனவே, உடல்நிலை கவலைக்கிடமான முறையிலேயே அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். #tamilnews
 
Tags:    

Similar News