நாமக்கல்லில் லாரி டிரைவரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது
நாமக்கல்:
நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் அலு வலகத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் பாலகிருஷ்ணன்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதன்சந்தை அருகே சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு சேலத்தை சேர்ந்த சின்னதம்பி என்பவர் காவிரி ஆற்றில் இருந்து லாரியில் மணல் ஏற்றி வந்தார். அந்த லாரியை தாசில்தார் பாலகிருஷ்ணன் தடுத்து நிறுத்தி சோதனையிட்டார்.
அப்போது சின்னதம்பி அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்தது. இதற்காக தாசில்தார் பாலகிருஷ்ணன் அவருக்கு ரூ.54ஆயிரம் அபராதம் விதித்தார். அதனை செலுத்திவிட்டு சின்னதம்பி வண்டியை எடுத்து செல்வதாக கூறினார்.
அதற்கு தாசில்தார் லாரியை விடுவிக்க வேண்டுமென்றால் மேலும் ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான் விடுவேன் என்று கூறினார். அதற்கு டிரைவர் தன்னிடம் ரூ.5ஆயிரம் இருப்பதாக கூறினார்.
அந்த பணத்தை பெற்றுக் கொண்ட தாசில்தார் மீதி பணத்தையும் கொடுத்து விட்டு வண்டியை எடுத்து செல்லுமாறு கூறினார்.
ஆனால் மீதி பணத்தை கொடுக்க விருப்பம் இல்லாத சின்னதம்பி நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்களது அறிவுரையின்படி இன்று காலை தாசில்தார் அலுவலகத்தில் வைத்து தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை சின்னதம்பி கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் தாசில்தார் பாலகிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், லஞ்சமாக பெற்ற ரூ.5ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து தாசில்தார் அலுவலகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கணக்கில் வராத பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தாசில்தார் அலுவலகத்தில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
லஞ்சம் வாங்கி பிடிபட்ட தாசில்தார் பாலகிருஷ்ணன் கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் சேந்தமங்கலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews