search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாசில்தார் கைது"

    • ராஜாராம் தடையில்லா சான்று கேட்டு கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
    • கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகில் உள்ள விமான் நகரை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 64). இவர் தன்னுடைய மனைவி சந்திராவதிக்கு சொந்தமான 36 சென்ட் நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்காக, தடையில்லா சான்று கேட்டு கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

    அப்போது தாசில்தார் வசந்த மல்லிகா மற்றும் அவருடைய கார் டிரைவர் கிருஷ்ணன் ஆகியோர் ராஜாராமிடம் தடையில்லா சான்று வழங்குவதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளனர். இது தொடர்பாக ராஜாராம் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பீட்டர் பால்துரையிடம் புகார் செய்தார்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில், ரசாயன மை தடவிய ரூ.30 ஆயிரத்தை ராஜாராம் நேற்று கோவில்பட்டி தாலுகா அலுவலகத்துக்கு சென்று தாசில்தார் வசந்த மல்லிகாவிடம் வழங்கினார். அப்போது தாலுகா அலுவலக வளாகத்தில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பீட்டர் பால்துரை, இன்ஸ்பெக்டர்கள் சுதா, அனிதா மற்றும் போலீசார் விரைந்து சென்று, தாசில்தார் வசந்த மல்லிகாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் கிருஷ்ணனையும் கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் தாசில்தார் வசந்த மல்லிகா நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள் சிறையிலும், டிரைவர் கிருஷ்ணன் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×