செய்திகள்
திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவி பலி
திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவி பலியானார். மாணவி உயிர் இழந்த சம்பவம் அம்மாபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் அம்மாபாளையம் கோபால் மில் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகள் பூமிகா (10). அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 14-ந்தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிய பூமிகாவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ரத்த பரிசோதனை செய்த போது டெங்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி பூமிகா இறந்தார். டெங்கு காய்ச்சலுக்கு மாணவி உயிர் இழந்த சம்பவம் அம்மாபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.