செய்திகள்

தர்மபுரியில் இன்று போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல்

Published On 2017-12-14 15:06 GMT   |   Update On 2017-12-14 15:06 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சேலம்- தர்மபுரி மெயின் ரோட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
நல்லம்பள்ளி:

தர்மபுரி பாரதி புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசை கண்டித்தும் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்த அனுமதி கேட்டனர். இதற்கு அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்கும் வண்ணம் போக்குவரத்து அலுவலகத்தின் மெயின் கேட்டை இழுத்தும் பூட்டு போடப்பட்டது. போராட்டம் நடத்த அனுமதி அளிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் இன்று பணியை புறக்கணித்து அலுவலகம் முன்பு உள்ள சேலம்-தர்மபுரி மெயின் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில்  500-க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்றனர். 

அவர்கள் கூறுகையில், நிலுவையில் உள்ள சர்வீஸ் பணம், ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகளுக்கான பணம் பல ஆயிரம் கோடி ரூபாய் போக்குவரத்து ஊழியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டி உள்ளது. இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு-போக்குவரத்து சங்கங்கள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. அதில் இன்னும் 3 மாதங்களில் பணம் முழுவதும் அளித்து விடுவதாக கூறப்பட்டது. ஆனால் 3 மாதங்கள் கடந்தும் பணம் இன்னமும் வழங்கவில்லை. இது குறித்து அதிகாரிகளிடத்தில் கேட்டால், அவர்கள் பதில் கூறவே மறுக்கிறார்கள். ஆகவே தான் இன்று நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததால் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தோம். என்றனர்.

இப்போராட்டத்தின் காரணமாக சேலம்-தர்மபுரி மெயின் ரோட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
Tags:    

Similar News