செய்திகள்

மலைப்பகுதியில் மழை இல்லை: நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது

Published On 2017-11-24 08:03 GMT   |   Update On 2017-11-24 08:03 GMT
அணைப்பகுதி மற்றும் தாலுகா பகுதிகளில் எங்கும் நேற்று மழை பெய்யாததால் நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ள‌து.
நெல்லை:

தமிழகம் முழுவதும் பரவலாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த மாதம் பெய்த மழையினால் குண்டாறு, வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு ஆகிய 3 அணைகள் நிரம்பின. பிரதான பாசன அணையான பாபநாசம் அணை 100 அடியை தாண்டியது. கடனா உள்ளிட்ட அணைகளும் வேகமாக நிரம்பி வந்தன. இந்த நிலையில் மழை நின்றது. இதன்பிறகு ஒரு வாரம் வெயில் அடித்தது.

இதன்பின்னர் கடந்த 4 நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மலைப்பகுதியில் கன மழை கொட்டியது. இதனால் பாபநாசம் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை தாண்டியது. இந்த அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 100.90 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1325 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து 704 கன அடி தண்ணீர் வெளியேற்ற‌ப்பட்டது.

இதேபோல சேர்வலாறு அணை நீர்மட்டம் 113.02 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.50 அடியாகவும் உள்ளன. கடனா அணை நீர்மட்டம் 80.20 அடியாக உள்ள‌து. இந்த அணை நிரம்ப இன்னும் 3 அடி தண்ணீரே தேவை. ராமநதி அணை நீர்மட்டம் 65 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 64.64 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 28.50 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 93 அடியாகவும் உள்ளன.

அணைப்பகுதி மற்றும் தாலுகா பகுதிகளில் எங்கும் நேற்று மழை பெய்யவில்லை. இதனால் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்துள்ள‌து. எனினும் பிசான சாகுபடிக்காக அணைகள், கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்ப‌ட்டு உள்ளன.


Tags:    

Similar News