செய்திகள்

ராமேசுவரம் மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதா? - இந்திய கடலோர காவல்படை மறுப்பு

Published On 2017-11-14 03:08 GMT   |   Update On 2017-11-14 03:08 GMT
ராமேசுவரம் மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக வெளியான தகவலை இந்திய கடலோர காவல் படை மறுத்துள்ளது.
ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

ராமேசுவரம் அந்தோணிராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் மீனவர்கள் பிச்சை, சாண்ட்ரோ, ஜான்சன், நிஷாந்த், தேவராஜன், சூசையா ஆகிய 6 பேர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த ஒரு கப்பல் அவர்களை விரட்டியடித்தது. அத்துடன் மீனவர்களை நோக்கி ரப்பர் குண்டுகளால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும், இதில் மீனவர்கள் பிச்சை, சாண்ட்ரோ ஆகியோர் காயம் அடைந்ததாகவும் நேற்று மாலையில் பரபரப்பான தகவல் வெளியானது.

இதுபற்றி மீனவர் சங்கத்தலைவர்களிடம் கேட்டபோது, “கடலோர காவல் படை சுட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனினும் சம்பந்தப்பட்ட படகில் சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்பினால் தான் உண்மை தெரியவரும்” என்று கூறினார்கள்.

இதுபற்றி, மண்டபத்தில் உள்ள கடலோர காவல் படை முகாமை தொடர்பு கொண்டு கேட்டபோது, “இந்திய கடலோர காவல்படையால் எந்த ஒரு துப்பாக்கி சூடும் நடத்தப்படவில்லை” என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News