செய்திகள்

ராசிபுரத்தில் மகனை கொன்று தாய் தற்கொலை

Published On 2017-11-13 07:33 GMT   |   Update On 2017-11-13 07:33 GMT
ராசிபுரத்தில் கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் மகனை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் சுவாமி சிவானந்தா சாலை கிருஷ்ணன் தெருவில் வசித்து வருபவர் கார்த்திக் (வயது 29).

திருச்செங்கோட்டில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்சா(28). இவர்களுக்கு தீபக்(5) என்ற மகன் உள்ளான். இவர்களுடன் கார்த்திக்கின் தாயார் பாப்பாத்தி வசித்து வருகிறார்.

அம்சா தனது மகன் தீபக்கிற்கு திடீரென வி‌ஷ மாத்திரைகளை கொடுத்து விட்டு, தானும் மாத்திரைகளை தின்றார். வி‌ஷம் உடல் முழுவதும் பரவி மயங்கி விழுந்து உயிருக்கு போராடினர்.

உறவினர்கள் அங்கு வந்து அம்சாவையும், குழந்தை தீபக்கையும் மீட்டு சேலம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அம்சாவும், மகன் தீபக்கும் பரிதாபமாக இறந்தனர்.

ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

கார்த்திக்கும், அம்சாவும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கார்த்திக்குக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனை அவர், காதலிக்கும் போது அம்சாவிடம் இருந்து மறைத்துள்ளார்.

திருமணம் ஆன பிறகு கார்த்திக் மது குடித்து வந்ததால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. கணவன், மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

நேற்று வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த கார்த்திக் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றியதால் அம்சா மகனை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வி‌ஷ மாத்திரையை கரைத்து குழந்தை தீபக்குக்கு கொடுத்தார். பின்னர் தானும் அதனை உட்கொண்டார்.

பின்னர் பக்கத்து தெருவில் உள்ள அண்ணன் வீட்டிற்கு அம்சா போன் செய்து, நடந்த சம்பவத்தை கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அண்ணன் மனைவி உடனே புறப்பட்டு கார்த்திக் வீட்டுக்கு ஓடி வந்தார். அங்கு அம்சாவும் குழந்தையும் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு பேராடிக் கொண்டிருந்தனர்.

இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News