செய்திகள்

எடப்பாடி-அமைச்சர்களை மாற்றுவதே எங்கள் அணியின் நோக்கம்: தங்கதமிழ்ச்செல்வன்

Published On 2017-10-23 07:07 GMT   |   Update On 2017-10-23 07:08 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஊழல் அமைச்சர்களை மாற்றுவதே எங்கள் அணியின் நோக்கமாகும் என்று தினகரன் ஆதரவாளரான தங்கதமிழ்ச்செல்வன் கூறினார்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் புதிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பச்சூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளரும், பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஏழுமலை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. அம்மா அணியின் கொள்கைப் பரப்பு செயலாளருமான தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டார்.

பின்னர் தங்கதமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பா.ஜ.க. முதல்வர் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்த புகாரின் பேரில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அதன் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக செயல்படலாம் என அறிவித்தது. இதுபோல் எங்கள் மீதான வழக்கிலும் இதே போன்ற தீர்ப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.



ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்து எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தார். அப்போது அந்த அணியினருக்கு ஏன் நோட்டீஸ் கொடுக்கவில்லை.

மத்திய பா.ஜனதா அரசின் கட்டுப்பாட்டில் தான் தமிழக அரசு உள்ளது. பா.ஜ.க.வின் தூண்டுதலின் காரணமாகவே சேகர் ரெட்டி, தமிழக முதன்மைச் செயலாளர் ராம்மோகன்ராவ் மற்றும் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தினர்.

அப்போது ஓ.பி.எஸ். மவுனமாக இருந்ததற்கு காரணம் அவர் மீதான வழக்கால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலேயே, தற்போதைய அரசு போல மோசமான அரசு வேறு எங்கும் பார்த்ததில்லை. மேலும், உள்ளாட்சியில் முறைகேடுகளில் ஈடுபடுவதாலேயே நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கின்றனர்.

தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. இதுவரையில் டெங்கு காய்ச்சல் பாதித்து உயிரிழந்தோருக்கு எங்கள் அணி சார்பில் நிவாரணம் வழங்கப்படும்.



அதற்கு முன்னதாக தற்போதைய ஆட்சியை அகற்றுவதை விட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஊழல் அமைச்சர்களை மாற்றுவதே எங்கள் அணியின் நோக்கமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மானாமதுரை எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, நிர்வாகிகள் பொன்ராஜா, ராஜு, கந்தன், செல்வக்குமாரி அண்ணாதுரை, ஜெயதேவன், ராஜசேகர், கேசவன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News