பழனி அருகே டெங்கு புழுக்களுடன் இருந்த தனியார் ஆலைக்கு அபராதம்
பழனி:
பழனி நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் சுகாதார குழுவினர் சாமிநாதபுரம், சி.வி.ஜி.நகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்குள்ள ஒரு தனியார் ஆலையில் ஆய்வு மேற்கொண்டபோது டெங்கு கொசுக்களை உருவாக்கும் புழுக்களுடன் குடிநீர் தொட்டி இருந்தது. இதனையடுத்து அதனை அப்புறப்படுத்தினர்.
மேலும் சுகாதாரமற்ற முறையில் குடிநீர் தொட்டியை வைத்திருந்த தனியார் ஆலை நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதுடன் அபராதமும் விதிக்கப்பட்டது. சுகாதார குழுவினர் அப்பகுதி முழுவதும் கொசுமருந்து அடிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
சாமிநாதபுரம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் நீண்ட நாட்களாக குவித்து வைக்கப்பட்டிருந்தன. அங்கு கொசுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் மருந்து அடிக்கப்பட்டது.