செய்திகள்

தீபாவளி பண்டிகையிலும் மண்ணை காக்கும் போராட்டம் தொடரும்: கதிராமங்கலம் கிராம மக்கள் அறிவிப்பு

Published On 2017-10-17 05:26 GMT   |   Update On 2017-10-17 05:26 GMT
நாளை தீபாவளி பண்டிகையிலும் மண்ணை காக்கும் போராட்டம் தொடரும்... எங்களுக்கு இந்த தீபாவளி கருப்பு தீபாவளி தான் என்று கதிராமங்கலம் கிராம மக்கள் கூறினர்.
கும்பகோணம்:

கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மீத்தேன் திட்டத்தை கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் கடந்த மே 19-ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் 150-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் ஜெயராமன், மற்றும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதுபற்றி ஒருங்கிணைப்பாளர்கள் கூறும் போது, ‘‘ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று 150-வது நாளாக போராடி வருகிறோம். ஆனால் இந்த போராட்டத்தை மத்திய அரசும், மாநில அரசும் இதுவரை கண்டு கொள்ளவில்லை. இது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இதுவரை அதிகாரிகள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. நாளை தீபாவளி பண்டிகை அன்றும் மண்ணை காக்கும் போராட்டம் தொடரும்... எங்களுக்கு இந்த தீபாவளி கருப்பு தீபாவளி தான்’’ என்றனர்.

Tags:    

Similar News