செய்திகள்
பொள்ளாச்சி ரெயில்நிலையத்தில் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த பயணிகள்.

டிரைவர் தூங்கியதால் திருச்செந்தூர் ரெயில் 1½ மணி நேரம் தாமதம் - பயணிகள் போராட்டம்

Published On 2017-09-25 03:57 GMT   |   Update On 2017-09-25 03:57 GMT
பொள்ளாச்சியில் இன்று காலை டிரைவர் தூங்கியதால் திருச்செந்தூர் ரெயில் புறப்பட 1½ மணிநேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சி:

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 4.50 மணிக்கு புறப்பட்டது.

பொள்ளாச்சிக்கு காலை 6.10 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் ரெயில் 6.15 மணிக்கு புறப்பட வேண்டும்.

இதற்கிடையே பொள்ளாச்சி வந்த ரெயிலை ஓட்டி வந்த டிரைவர்கள் வேலை நேரம் முடிந்து சென்று விட்டனர்.

இதைதொடர்ந்து ரெயிலை இயக்க டிரைவர் நாகராஜ் என்பவர் வந்தார். ஆனால் மாற்று டிரைவரான உதவியாளர் பாலமுருகன் என்பவர் வேலைக்கு வரவில்லை.

இதனால் டிரைவர் நாகராஜ், பாலமுருகன் வராததால் ரெயிலை இயக்க முடியாமல் தாமதம் செய்து வந்தார். இந்த நிலையில் 6.15 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் நின்று கொண்டே இருந்ததால் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர்.

இதனால் ரெயில் ஏன் புறப்படவில்லை என்று பயணிகள் ரெயில் நிலைய அலுவலர்களிடம் கேட்டனர். இதை தொடர்ந்து விசாரித்த போது உதவியாளர் பாலமுருகன், ரெயில் நிலைய ஓய்வறையில் தூங்கி கொண்டிருந்தது தெரிய வந்தது. இதைதொடர்ந்து பாலமுருகனை பணிக்கு செல்லுமாறு வற்புறுத்தினார்.

அப்போது அவர் நேற்று திருச்செந்தூரில் இருந்து பொள்ளாச்சிக்கு இரவு 12 மணிக்கு தான் வந்தேன். குறைந்தது 8 மணி நேரமாவது ஓய்வு வேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் உதவியாளர் பாலமுருகனையும் போலீசார் சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர் பணிக்கு செல்ல சம்மதித்தார்.

இதனால் திருச்செந்தூர் ரெயில் சுமார் 1½ மணி நேரம் தாமதமாக காலை 7.40 மணிக்கு புறப்பட்டு சென்றது.


Tags:    

Similar News