செய்திகள்

முதலியார்பேட்டையில் பூட்டி இருந்த வீடுகளில் கொள்ளையடித்த வாலிபர் சிக்கினார்

Published On 2017-09-22 11:53 GMT   |   Update On 2017-09-22 13:35 GMT
முதலியார்பேட்டையில் வீடு புகுந்து நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்த வாலிபர் சிக்கினார்.

புதுச்சேரி:

புதுவை முதலியார் பேட்டை தியாகு முதலியார் நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்த போது, மர்ம நபர்கள் இவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த விலை உயர்ந்த டேப் லெட், செல்போன், டி.வி. உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் வசிக்கும் தில்லைவதி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் டி.வி. செல்போன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இந்த 2 வீடுகளில் கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு ரூ. 3½ லட்சமாகும். இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் முதலியார் பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று இரவு தியாகு முதலியார் நகரில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி திரிந்து கொண்டு இருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்.

ஆனால், அந்த வாலிபர் முன்னுக்குப்பிண் முரணாக தகவல் தெரிவித்ததால் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று முறையாக விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவன் முதலியார் பேட்டை பூந்தோட்ட வீதியை சேர்ந்த குமார் (வயது 30) என்பதும் தற்போது அவன் அரியாங்குப்பத்தில் வசித்து வருவதும் தெரியவந்தது.

மேலும் அவனிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தியாகு முதலியார் நகரில் அன்பழகன் மற்றும் தில்லைவதி ஆகியோர் வீட்டில் பூட்டை உடைத்து நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டான்.

இதையடுத்து குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவன் கொடுத்த தகவலின் அடிப்படையில் கொள்ளை போன ரூ.3½ லட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டனர்.

Tags:    

Similar News