search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலியார்பேட்டை"

    முதலியார்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகையை மர்ம கும்பல் பறித்து சென்று விட்டது.

    புதுச்சேரி:

    முதலியார் பேட்டை வாரியார் நகரை சேர்ந்தவர் உலகநாதன். இவரது மனைவி சித்ரா (வயது 42). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒரு மகன் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். மற்றொரு மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர். சித்ரா கணவரை விட்டு பிரிந்து 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.

    நேற்று சித்ரா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் கொண்ட கும்பல் சித்ராவின் வீட்டுக்கு வந்தது. அவர்கள் சித்ராவின் கழுத்தில் கத்தியை வைத்து அணிந்திருந்த நகைகளை கழற்றி கொடுக்கும்படியும், அப்படி கழற்றி கொடுக்காவிட்டால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டியது.

    இதனால் பயந்து போன சித்ரா அணிந்திருந்த தாலி செயின் உள்பட 8 பவுன் நகையை கழற்றி கொடுத்தார். இதையடுத்து அந்த கும்பல் நகையுடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. அதே வேளையில் பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகை அந்த கும்பலிடம் இருந்து தப்பியது.

    இதுகுறித்து சித்ரா முதலியார் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

    முதலியார்பேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    முதலியர்பேட்டை கடலூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரதாப் (வயது 31). இவர் முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு பிரியாணி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 29-ந் தேதி காலை தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு வேலைக்கு வந்தார்.

    பின்னர் கடை அருகே மோட்டார் சைக்கிளை பூட்டி விட்டு கடையில் வேலை பார்த்தார். மதியம் 1 மணிக்கு பிரதாப் தனது மோட்டார் சைக்கிளை பார்த்த போது அதை காணாமல் திடுக்கிட்டார். மோட்டார் சைக்கிளை யாரோ திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து பிரதாப் முதலியார்பேட்டை போலீ சில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.

    அதில், பிரதாப்பின் மோட்டார் சைக்கிளை ஒரு வாலிபர் திருடி செல்வது பதிவாகி இருந்தது.அதை வைத்து விசாரணை நடத்தினார்கள்.

    நேற்று காலை போலீசார் முருங்கப்பாக்கம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட அந்த வாலிபர் அந்த பகுதியில் நடந்து வந்து கொண்டு இருந்தார்.

    அவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் புதுவை அருகே ரெட்டிச்சாவடி உடலப்பட்டு பகுதியை சேர்ந்த ராஜி (வயது 26) டிரைவர் என்பதும், அவர் செலவுக்கு பணம் இல்லாததால் கள்ளச் சாவி போட்டு பிரதாப்பின் மோட்டார் சைக்கிளை திருடியதாகவும் கூறினார்.

    இதையடுத்து ராஜியை கைது செய்த போலீசார் அவரது வீட்டில் மறைத்து வைத்திருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    முதலியார்பேட்டையில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை தமிழ்த்தாய் நகரை சேர்ந்தவர் லூர்துசாமி (வயது 63). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் பக்கவாதநோய் முற்றிலுமாக குணமாகவில்லை. இதனால் தினம் தினம் லூர்துசாமி அவதி அடைந்து வந்தார்.

    நேற்று காலை லூர்துசாமியை ஆஸ்பத்திரிக்கு செல்ல தயாராகும்படி அவரது மகன் தூயமணி கூறினார். இதையடுத்து லூர்துசாமி குளித்து விட்டு வருவதாக கூறி குளியலறைக்கு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் லூர்துசாமி குளியல் அறையில் இருந்து வெளியே வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த தூயமணி குளியலறைக்கு சென்று பார்த்தார். உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் குளியலறையை உடைத்து பார்த்தார். அங்கு லூர்துசாமி துணி தொங்கவிடும் ஹேங்கரில் துப்பட்டாவால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×