பெரியகுளம் அருகே பீரோவை தூக்கி சென்று நகை- பணம் கொள்ளை
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரகீம் (வயது63). நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் பின் வாசல் வழியாக பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். பின்பு அவர்கள் மயக்க ஸ்பிரே அடித்ததால் வீட்டில் இருந்த அனைவரும் மயங்கினர். பீரோவில் இருந்த துணிமணிகளை எடுத்து வெளியே போட்டு விட்டு பீரோவை தூக்கி சென்றனர்.
அருகில் உள்ள குளத்துக்கு கொண்டு சென்ற அவர்கள் அதனை உடைத்து உள்ளே இருந்த 52 பவுன் தங்க நகை மற்றும் ரூ.55 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மயக்கம் தெளிந்து எழுந்த அப்துல்ரகீம் மற்றும் குடும்பத்தினர் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் பீரோவும் மாயமாகி இருந்ததால் அருகில் சென்று பார்த்தனர். அப்போது குளத்தில் பீரோவை மட்டும் விட்டு விட்டு உள்ளே இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து பெரியகுளம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பாணியில் பீரோவை தூக்கி வந்து பெரியகுளத்தில் கொள்ளை நடந்தது. அதே கும்பல் இங்கே கைவரிசை காட்டியிருப்பார்களோ? எனபோலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் மோப்ப நாயும் அழைத்து வரப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது.