செய்திகள்

உடுமலையில் மோட்டார் சைக்கிள்-கார் மோதி விபத்து: 2 பேர் பலி

Published On 2017-09-09 04:45 GMT   |   Update On 2017-09-09 04:45 GMT
உடுமலையில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கோழி தீவன ஊழியர்கள் 2 பேர் பலியாகினர்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை எரிசனம்பட்டியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 47). அவர் அங்குள்ள கோழி தீவன நிறுவனத்தில் டிரைவராக இருந்தார். உடுமலை-பொள்ளாச்சி கெடிமேடு கூளநாயக்கன்பட்டியை சேர்ந்வர் பழனிசாமி (50). அதே கம்பெனியில் லோடு மேனாக வேலை செய்து வந்தார்.

இன்று அதிகாலை 5.30 மணிக்கு 2 பேரும் கம்பெனியில் இருந்து டீ குடிக்க அருகில் உள்ள வரதராஜபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது உடுமலையில் இருந்து திருப்பூருக்கு ஒரு கார் வந்தது.

மோட்டார் சைக்கிளில் இருவரும் ரோட்டை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த ஆறுச்சாமியும், பழனிசாமியும் ரத்தவெள்ளத்தில் கிடந்தனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விபத்தில் சிக்கியவர்களை பரிசோதனை செய்தபோது அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து குடிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடுமலை டி.எஸ்.பி. விவேகானந்தன், குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகன், உடுமலை இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆறுச்சாமி, பழனிசாமி ஆகியோரின் உடல்களை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பலியான ஆறுச்சாமிக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

விபத்தில் பலியான ஆறுச்சாமி, பழனிசாமி

Tags:    

Similar News