செய்திகள்

நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்: ஜான்பாண்டியன்

Published On 2017-08-11 11:31 GMT   |   Update On 2017-08-11 11:31 GMT
ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜான்பாண்டியன் கூறியுள்ளார்.
கோவை:

நீட் தேர்வை மத்திய, மாநில அரசுகள் ரத்துசெய்யக்கோரி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகர் மாவட்ட செயலாளர் சுந்தரராஜூ தலைமை வகித்தார். நிர்வாகிகள் சந்திரன், உதயகுமார், ஜெயராஜ், கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிற்சங்கத்தலைவர் மணிமாறன் வரவேற்றார்.

இதில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் கலந்து கொண்டார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வால் கிராமப்புற ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதனால் மத்திய அரசு தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மாநில அரசு பல முறை மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தும் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.

ஆட்சியில் அமர்வது குறித்து எடப்பாடி, ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரனுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதனால் மக்கள் சேவையில் யாரும் ஈடுபடவில்லை. இதற்கு விரையில் தீர்வு காணவேண்டும்.

இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்குமா? என்பது குறித்து உங்களை போலவே நானும் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில கொள்கை பரப்பு செயலாளர் நெல்லையப்பன், இளைஞரணி பொறுப்பாளர் சங்கர் குரு நன்றி கூறினார்.
Tags:    

Similar News