செய்திகள்

கதிராமங்கலம் போராட்டம்: கைதானவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி

Published On 2017-07-04 10:06 GMT   |   Update On 2017-07-04 10:06 GMT
கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேரின் ஜாமீன் மனுவை தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தஞ்சாவூர்:

கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து கடந்த 30-ந் தேதி போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் தடியடி நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டதாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி நக்கீரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பேராசிரியர் ஜெயராமன் சார்பில் வக்கீல்கள் நல்லதுரை, சிவசுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகி 9 பேரையும் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என வாதிட்டனர்.


இதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கதிராமங்கலத்தில் பதட்டம் நீடித்து வருகிறது. பொதுமக்களால் தாக்கப்பட்ட போலீசார் கும்பகோணம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சுமூக நிலை ஏற்படாது என அரசு வக்கீல் வாதிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதி நக்கீரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். பேராசிரியர் ஜெயராமன் சார்பில் மீண்டும் ஜாமீன்மனு தாக்கல் செய்ய உள்ளதாக வக்கீல்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News