செய்திகள்

தனியார் பஸ்சில் சிறுமி கற்பழிப்பு: தேசிய ஆதிதிராவிடர் ஆணைய உறுப்பினர்கள் நேரில் விசாரணை

Published On 2017-06-21 10:00 GMT   |   Update On 2017-06-21 10:00 GMT
ஓமலூர் அருகே தனியார் பேருந்தில் சிறுமி கற்பழிக்கப்பட்டது தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய உறுப்பினர்கள் நேரில் விசாரணை நடத்தினர்.
ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த நாரணம்பாளையம் கிராமத்தில் கடந்த 4-ந் தேதி தனியார் பஸ்சில் 15 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக 2 டிரைவர்களும், ஒரு கண்டக்டரும் கைது செய்யப்பட்டனர். இதற்கு உடந்தையாக இருந்த மற்றொரு பஸ்சின் கண்டக்டரும் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆதி திராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தின் முதுநிலை உறுப்பினர்கள் இனியன், லிஸ்டர் ஆகியோர் இன்று நாரணம்பாளையம் வந்து சம்பவ நடந்த இடத்தை பார்வையிட்டனர். அங்குள்ள கிராம மக்களிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தனர்.

அதன்பிறகு அவர்கள் ஓமலூர் போலீஸ் நிலையம் சென்று பறிமுதல் செய்யப்பட்ட தனியார் பஸ்சை ஆய்வு செய்தனர். வழக்கு விவரங்களையும் கேட்டு அறிந்து கொண்டனர்.

அதன்பிறகு ஆணையத்தின் உறுப்பினர் இனியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓமலூர் சம்பவத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை போன்று வேறு யாருக்கும் நேரக்கூடாது. இந்த வழக்கில் போலீசார் விரைந்து செயல்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்தை நிதியாக வழங்கி உள்ளனர்.

தொடர்ந்து அந்த சிறுமிக்கு இலவச கல்வி வழங்க அனைத்து உதவியும் செய்யப்படும். அவர்களது பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அவர்களது குடும்பத்தினருக்கு சொந்த வீடு அல்லது அரசு வேலை ஆகிய இரண்டில் ஒன்று வழங்கப்படும்.

பாலியல் கொடுமைக்கு சிறுமிகள் ஆளாவதை தடுக்க பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அதிக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணவ, மாணவிகள் மத்தியில் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News