செய்திகள்

மத்திய அரசின் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு: கோவையில் மாட்டு இறைச்சி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-05-27 06:59 GMT   |   Update On 2017-05-27 06:59 GMT
மத்திய அரசின் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் மாட்டு இறைச்சி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.
கோவை:

கால்நடை சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனால் நாடு முழுவதும் மாடு இறைச்சி வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாநகர பகுதியில் போத்தனூர், செட்டிப்பாளையம் ரோடு, கணபதி, குனியமுத்தூர், ஆத்துபாலம் பகுதிகளில் ஏராளமான மாடு அறுவை கூடங்கள் உள்ளன.

இந்த தொழிலை நம்பியிருக்கும் 100-க்கும் மேற்பட்ட இறைச்சி வியாபாரிகள் செட்டிப்பாளையம் சாலையில் உள்ள மாடு அறுவை கூடத்தின் முன்பு கூடி மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவலறிந்து போத்தனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட மாட்டு இறைச்சி வியாபாரிகள் உள்ளன. மத்திய அரசின் தடை அறிவிப்பால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உத்தரவை வாபஸ் பெற வேண்டும். தடை உத்தரவை திரும்ப பெறக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து இன்று எங்களது கமிட்டி கூடி ஆலோசனை செய்யும் என்றனர்.

சமூக நீதிக்கட்சி சார்பில் இன்று மாலை 4 மணிக்கு மத்திய அரசின் அரசாணை நகல் எரிப்பு போராட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடக்கிறது.
Tags:    

Similar News