செய்திகள்

காதல் திருமணம் செய்த மனைவியை அடித்து தூக்கில் தொங்க விட்ட கணவர்

Published On 2017-05-25 10:51 GMT   |   Update On 2017-05-25 10:52 GMT
ஒட்டன்சத்திரம் அருகே காதல் திருமணம் செய்த மனைவியை அடித்து தூக்கில் தொங்க விட்டதாக பெண்ணின் தந்தை போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள தும்மிச்சம்பட்டியை சேர்ந்த மயில்சாமி மகள் சிவபிரியா (வயது19). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழனியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அப்போது மதுரையை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு மதுரையிலேயே தன் மனைவியுடன் கார்த்திக் வசித்து வந்தார். பின்னர் பெண் வீட்டாரும் ஏற்றுக் கொண்டனர். தற்போது ஒரு மாத கைக்குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் ஒட்டன்சத்திரத்திற்கு வந்தனர்.

அவர்கள் இருவர் மட்டும் அறையில் இருந்தனர். மயில்சாமி மற்றும் அவரது மனைவி வெளியில் இருந்தனர். அப்போது பயங்கர சத்தம்கேட்கவே அறைக்குள் சென்றனர். அங்கு சிவப்பிரியா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தனது மகளை கார்த்திக்தான் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருக்க வேண்டும் என்று மயில்சாமி ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News