செய்திகள்

புதுவையில் 106 டிகிரி வெயில் பதிவானது

Published On 2017-05-16 08:33 GMT   |   Update On 2017-05-16 08:33 GMT
புதுவையில் நேற்று வரலாறு காணாத வகையில் 106 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
புதுச்சேரி:

புதுவையில், நேற்று 106 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

தமிழகம் மற்றும் புதுவையில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவு வறட்சி நிலவி வருகிறது. இந்த ஆண்டு வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

அதன்படி ஏப்ரல் மாதத்திலேயே புதுவையில் வெயில் கொளுத்தியது. கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. புதுவையில் 95 டிகிரி முதல் 97 டிகிரி வரை சராசரியாக வெயில் பதிவானது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. புதுவையில் நேற்று வரலாறு காணாத வகையில் 106 டிகிரி வெயில் பதிவானது.

இதனால் பகலில் அனல்காற்று வீசியது. மக்கள் கடும் அவதி அடைந்தனர். வெயில் கொடுமையால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

மாலையில் வெயிலின் தாக்கம் குறைந்த பின்னர் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடற்கரைக்கு சென்று பொழுதை போக்கினர். இதனால் நேற்று இரவு கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதே வேளையில் இரவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் புழுக்கம் தாங்காமல் பலர் வீட்டு வாசலிலேயே அமர்ந்து தூங்காமல் விழித்து இருந்தனர்.
Tags:    

Similar News