செய்திகள்

செவ்வாப்பேட்டை அருகே புதிய டாஸ்மாக் கடைக்கு பெண்கள் எதிர்ப்பு

Published On 2017-04-28 07:17 GMT   |   Update On 2017-04-28 08:34 GMT
செவ்வாப்பேட்டை அருகே புதிய கடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கட்டப்பட்டு வரும் கட்டிடம் மீது ஏறி பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செவ்வாப்பேட்டை:

தேசிய, மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.

ஆனால் டாஸ்மாக் கடைகள் அமைப்பதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

திருவள்ளூர் செவ்வாப்பேட்டை மெயின் ரோட்டில் இருந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. அதற்கு பதிலாக கிளாம்பாக்கம் பகுதியில் புதிய கடை திறக்க முடிவு செய்யப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது.

இதையறிந்து அப்பகுதி பெண்கள் புதிய கடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். கட்டிடம் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சமாதான பேச்சு நடத்தினர். டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கலெக்டரிடம் மனு கொடுங்கள் என்று கூறினர். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News