செய்திகள்

முதுகுளத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்து: 2 பேர் பலி

Published On 2016-10-24 05:03 GMT   |   Update On 2016-10-24 05:03 GMT
முதுகுளத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
முதுகுளத்தூர்:

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது35). இவரது மனைவி சேதுலட்சுமி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது.

இதையடுத்து குழந்தையையும், மனைவியையும் பார்க்க முத்துப்பாண்டி, தனது நண்பர்கள் நாகராஜன் (35), கமலக்கண்ணன் ஆகியோரை அழைத்து கொண்டு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார்.

ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு 3 பேரும் மீண்டும் ஊர் திரும்பினர். கீழத்தூவல் அருகே அரசு மருத்துவமனை வளைவில் திரும்பும்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் தலையில் படுகாயம் அடைந்த நாகராஜன், கமலக்கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். முத்துப்பாண்டி படுகாயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கீழத்தூவல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News