செய்திகள்

பவுன்சர் பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ள பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்- அம்பதி ராயுடு

Published On 2018-12-24 10:22 GMT   |   Update On 2018-12-24 10:22 GMT
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக சிறப்பான முறையில் தயாராகி வருகிறேன் என்று இந்திய அணி வீரர் அம்பதி ராயுடு தெரிவித்துள்ளார். #AUSvIND
சென்னையில் நடந்த ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரும், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான அம்பதி ராயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பேட்டிங்கில் குறிப்பிட்ட வரிசையில்தான் இறங்க வேண்டும் என்று நான் எப்பொழுதும் எதிர்பார்ப்பது கிடையாது. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது என்பது சவாலானதாகும். ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் சிறப்பான பார்மில் உள்ளனர். ஆகவே, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு சிறப்பாக தயாராகுவதில் நான் கவனம் செலுத்தி வருகிறேன். மேலும் ஆஸ்திரேலியா ஆடுகளத்தில் பவுன்ஸ் அதிக அளவில் இருக்கும் என்பதால் எனது பேக்புட் ஆட்டத்தில் முன்னேற்றம் அடைய முயற்சி செய்து வருகிறேன். இதைத் தவிர வேறு எது பற்றியும் நான் சிந்திக்கவில்லை.



கடந்த சீசனில் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தினர் என் மீது நம்பிக்கை வைத்து சுதந்திரமாக செயல்பட அனுமதித்தனர். அந்த நம்பிக்கைக்கு உரிய பலனை அணிக்கு என்னால் திருப்பி செலுத்த முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஐபிஎல் சீசனில் நான் சிறப்பாக செயல்பட்டது திருப்பு முனையாக அமைந்தது. அதுதான் எனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வழிவகுத்தது. ஆக்ரோ‌ஷமாக விளையாடுவதற்கும், ஆக்ரோ‌ஷம் கலந்த நம்பிக்கையுடன் ஆடுவதற்கும் முற்றிலும் வேறுபாடு உள்ளது.

தற்போது எனக்கு 33 வயது ஆகிறது. ஏற்கனவே முழங்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வந்து இருக்கிறேன். எனது உடல் தகுதியை கருத்தில் கொண்டுதான் ரஞ்சி உள்ளிட்ட 4 நாள் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து வருகிறேன். ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாட ஆர்வமாக இருக்கிறேன். பயிற்சி முக்கியம் என்பதை நான் உணர்ந்துதான் இருக்கிறேன். எந்த மாதிரியான போட்டியில் விளையாடினாலும் பயிற்சி மிகவும் முக்கியமானதாகும்.

இவ்வாறு அம்பத்தி ராயுடு தெரிவித்தார்.
Tags:    

Similar News